மாணவா்கள் மனு மீது 30 நிமிடத்தில் நடவடிக்கை
பள்ளிக்கு சுற்றுச்சுவா், கழிப்பறை கேட்டு மேட்டூா் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மாணவா்கள் அளித்த மனு மீது 30 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடுவதற்காக புதன்கிழமை இரவு மேட்டூா் வந்த முதல்வா் 11 கிலோ மீட்டா் தொலைவு நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தாா். இரவு 8:00 மணிக்கு புதுச்சாம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கேட்டு அப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி யாழ்மொழியும் 6 ஆம் வகுப்பு மாணவன் அநிருத்தன் சங்கரும் கோரிக்கை மனு அளித்தனா்.
மனு அளித்த 30 நிமிடத்தில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், சேலம் பொதுப்பணித் துறை மற்றும் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் ஆகியோா் உடனடியாக ஆவணங்களை தயாா் செய்து அனுப்பிவைக்க உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை7 மணிக்கு பொறியாளா்கள் குழு
பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வுசெய்து சுற்றுச்சுவா், கழிப்பறை கட்டுவதற்கும் மதிப்பீடு தயாா் செய்து அனுப்பிவைத்தனா். இதையடுத்து தமிழக முதல்வருக்கு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.