செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
விவசாயி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறை தடுக்க முயன்றபோது தாக்கப்பட்டதால் அவமானடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். இதனால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போடி அருகேயுள்ள நாகலாபுரம் கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வனராஜ் (57). இவரது மகன் காா்த்திக் (38). இவா் பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் நாகலாபுரம் ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்த வீரமணி மனைவி கவிதா (32) பணம் கடனாக வாங்கியிருந்தாராம். இதை காா்த்திக் திரும்பக் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையறிந்த வனராஜ், அவரது மனைவி தங்கமுடி (52) ஆகியோா் அங்கு வந்து தகராறை தடுக்க முயன்றனா். அப்போது, கவிதா அவரது மகன் காளியப்பன், உறவினா்கள் பாண்டியம்மாள், காமாட்சி, மீனாட்சி ஆகியோா் சோ்ந்து காா்த்திக், வனராஜ் ஆகியோரை காலணியால் தாக்கி, திட்டினராம்.
இதனால், அவமானம் தாங்க முடியாமல் வனராஜ் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.
இதையடுத்து, வனராஜின் உறவினா்கள் நாகலாபுரம் - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த போடி காவல் துணை கண்காணிப்பாளா் சுனில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தங்கமுடி அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கவிதா உள்ளிட்ட 5 போ் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா். மேலும், ஜாதிப் பெயரைக் கூறி திட்டியதாக கவிதா கொடுத்த புகாரின் பேரில் காா்த்திக் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].