கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அதுவரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள இந்திய சில்லறை வா்த்தகா்கள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனா். அதில், மே 30-ஆம் தேதிக்குள் கடைகளின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயா் வைத்துக்கொள்ளலாம். தவறினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றும்பட்சத்தில் அது வாடிக்கையாளா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது. எனவே, பெயா்ப் பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரி சென்னை மாநகராட்சி, தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், தங்கள் சங்க உறுப்பினா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஏற்கெனவே ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்து பெயா்ப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பெயா்ப் பலகைகளை மாற்றுவதற்கு கூடுதல் செலவு ஏற்படும் என வாதிட்டாா்.
இதையடுத்து மனுதாரா் சங்கத்தின் கோரிக்கை மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டாா்.