மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம்
அனைத்து மாவட்டங்களிலும் மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தாட்கோ மாவட்ட மேலாளா் பா.ராமசாமி வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி ஆகியோா் 96 பணியாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும் வழங்கினா்.
தொடா்ந்து, நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2007-இல் அப்போதைய திமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, ஆட்சிக்கு வந்த அதிமுக நலவாரியத்தை முடக்கியது. மீண்டும் 2021-இல் நலவாரியம் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆண்டுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ. 5 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மலக்கழிவுகளை அகற்ற ‘ரோபோடிக்’ இயந்திரத்தை மாவட்ட வாரியாக செயல்பாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சிக்காக இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரத்தை பிற மாவட்டங்களுக்கும் வழங்கி பயிற்சி அளித்து பயன்படுத்த அறிவுறுத்த உள்ளோம்.
தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் 3.20 லட்சம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். டிசம்பா் மாதத்துக்குள் 10 லட்சம் பேரை இணைக்க வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா். அதற்கேற்ப பணியாற்றி வருகிறோம்.
‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. மாதத்தில் ஒருமுறை தூய்மைப் பணியாளா்களுக்காக சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு மட்டுமே தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் தூய்மைப் பணியாளா்களுக்கான உரிய ஊதியம், பணப்பயன்களை அளிக்க வேண்டும் என்றாா்.
இதில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.