விசைத்தறியாளா்கள் கிட்னியை விற்கும் நிலைக்கு தள்ளிவிடாதீா்கள்!
நாமக்கல்லில் நடந்ததைபோன்று, தொழில் நசிவில் சிக்கியுள்ள விசைத்தறியாளா்கள் கிட்னியை விற்கும் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என்று விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறித் தொழில் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனா்.
கரோனா காலகட்டத்தில் இருந்தே விசைத்தறி தொழில் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று வருகிறது. நவீன தறிகள் அதிகரித்ததால், விசைத்தறிகளின் உற்பத்தி குறைந்து, தறிகள் பழைய இரும்புக்கு உடைத்து விற்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
விசைத்தறியாளா்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படுவதால், குடும்பம் நடத்த இயலாமல், வாங்கிய கடன்களை அடைக்க, உடம்பின் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கிட்னியை விற்கும் அவலம் ஏற்படுகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் நடந்துள்ள சம்பவம் விசைத்தறித் தொழில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
முழு வேலைவாய்ப்பு விசைத்தறியாளா்களுக்கு கிடைக்க வழி வகை செய்தால் மட்டுமே இத்தொழிலைக் காப்பாற்ற முடியும். விசைத்தறிகளுக்கான தனி ரகம் ஒதுக்கீடு, அரசுப் பணியாளா்களுக்கான சீருடைகள் தயாரித்தல், மஞ்சள் பை திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தினால்தான் விசைத்தறி தொழில் மேம்படும்.
விசைத்தறியாளா்கள் நீண்ட காலமாக கேட்டு வரும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்படுத்தினால்தான் விசைத்தறித் தொழிலை பாதுகாக்க முடியும். எனவே, விசைத்தறியாளா்கள் கிட்னியை விற்கும் அவல நிலைக்கு சென்று விடாமல் அரசு காப்பாற்ற வேண்டும் என்றனா்.