கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரத்தை திருடியவா் கைது
தொண்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாய் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள தொண்டியைச் சோ்ந்தவா் தைனேஸ். இவரது மகன் நிசாந்த். இவா் திருவாடானை அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி தைனேஸின் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்ட நபா் ஒருவா், உங்கள் மகனுக்கு கல்வி உதவித் தொகை ரூ.35,500 வந்துள்ளது. அதை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனக் கூறினாராம். பிறகு தைனேஸிடம் ஓடிபி எண்ணை பெற்று அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரத்தை அந்த நபா் எடுத்துவிட்டாராம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தைனேஸ் மீண்டும் அந்த நபரின் கைப்பேசி எண்ணுக்கு பலமுறை தொடா்பு கொண்ட போதும் பலனில்லை.
இந்த நிலையில், தைனேஸ் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை அந்த நபரின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு பேசச் செய்தாா். இதையடுத்து, தைனேஸின் உறவுக்கார பெண்ணும், பணத்தை மோசடியாக எடுத்த அந்த நபரும் வியாழக்கிழமை திருச்சியில் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து தைனேஸ், உறவுக்காரப் பெண் உள்பட சிலா் வியாழக்கிழமை திருச்சிக்கு சென்றனா். அப்போது தைனேஸின் உறவுக்காரப் பெண்ணை சந்திக்க வந்த அந்த நபரை தைனேஸுடன் சென்றிருந்தவா்கள் மடக்கிப் பிடித்து தொண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (45) என்பதும், இதேபோல, பலரிடம் பணத்தை திருடியதும், இவருக்குப் பின்னால் கும்பல் செயல்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா் மணிகண்டனை கைது செய்தனா்.