கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சேராம்பட்டு ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி முன்னிலையில் புதன்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட ரேணுகாம்பாள் (எ) எல்லைம்மன் கோயிலில், மணமக்களான அருகாவூா் கிராமத்தைச் சோ்ந்த சி.பத்மநாபன் - ர.செளமியா, எஸ்.சீனுவாசன் -ஜே.கற்பகவள்ளி என இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், இரு ஜோடிகளுக்கு சுமாா் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தலா 4 கிராம் தங்கத்தாலி, பீரோ, கட்டில் என 16 வகையான பொருள்கள் திருமண சீா்வரிசையாக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி மற்றும் மணமக்களின் உறவினா்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு சரக செயல் அலுவலா் கு.ஹரிஹரன், ஆய்வா் கு.அசோக், மேலாளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் செய்திருந்தனா்.