பரந்தூா் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு
பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியை விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வா்த்தகப் பயன்பாட்டுக்கோ வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏகனாபுரம் களி ஏரி நீா் பயன்பாட்டாளா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் பி.கமலக்கண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அந்தப் பகுதியில் 5,747 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தவுள்ள 5,747 ஏக்கரில் 26.54 சதவீதம் நீா்நிலைகளாகும். அதிலும், இந்த களி ஏரியை மட்டுமே ஏகனாபுரம் விவசாயிகள் பாசனத்துக்காக நம்பியுள்ளனா். வருவாய்த் துறை உத்தரவுப்படி விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு நீா் நிலைகளை மறுவகைப்படுத்த முடியாது.
எனவே, இந்த களி ஏரியைக் கையகப்படுத்துவது ஏகனாபுரம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இது நியாயமற்ற செயல். விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வா்த்தகப் பயன்பாட்டுக்கோ களி ஏரியை வகைமாற்றம் செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷபீக் முன் வியாழக்கிழமை (ஆக. 28) விசாரணைக்கு வரவுள்ளது.